The Hon’ble Rural Development Minister – Redyarchatram College – Inspection

செ.வெ.எண்:-71/2025
நாள்:-24.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்டுமானப் பணிகளை இன்று(24.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரத்தில் உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.07.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்தக் கல்லுாரி தற்காலிகமாக கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இந்தக்கல்லுாரிக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் நிரந்தர கட்டடம் கட்டும் பணி ரெட்டியார்சத்திரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கட்டடம் தரைதளம் 1551 சதுர மீட்டர், முதல் தளம் 1529 சதுர மீட்டர், இரண்டாம் தளம் 1529 சதுர மீட்டர் அளவில் கட்டப்பட்டு வருகிறது. இதில் தரைதளத்தில் நிர்வாக அலுவலகம், 3 வகுப்பறைகள், நூலகம், நூலக அலுவலர் அறை, 2 ஆசிரியர்கள் அறை, 2 துறை தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிவறை ஆகியவை அமைக்கப்படவுள்ளன. முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 கருத்தரங்கம். 2 துறை தலைவர்கள் அறை மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிவறை ஆகியவை அமைக்கப்படவுள்ளன. இரண்டாம் தளத்தில் 6 வகுப்பறைகள், உடற்கல்வி ஆசிரியர் அறை, 2 ஆய்வங்கள், 1 கணினி ஆய்வகம், 1 ஆசிரியர் அறை, மாணவ, மாணவிகளுக்கான கழிவறை, மாடிப்படி வசதி, நடைபாதை வசதியுடன் கட்டப்பட உள்ளது.
இந்தப்பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.