The Hon’ble Rural Development Minister-Schemes-Sithaiyankottai TP

செ.வெ.எண்:-27/2025
நாள்:-08.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(08.03.2025) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிருபித்துக்காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலிஷத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். அரசின் திட்டங்கள் அனைத்தும், கடைக்கோடியில் வசிக்கும் மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், சித்தையன்கோட்டையில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, 4வது வார்டில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடை, யோகம் நகரில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, நரசிங்கபுரத்தில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடை மற்றும் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடை கட்டடம் என மொத்தம் ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் சுமார் 2500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு தேவையான நியாயவிலைக்கடை, சத்துணவு மையம், நாடக மேடை, திருமண மண்டபம், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்குவதற்கு குடிநீர் தொட்டிகள் ஆகிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
படித்த இளைஞர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்குவதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரவுள்ளன. அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
100 நாள் வேலை திட்டத்ததை பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் நிதி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் மாநில நிதியிலிருந்து அந்த திட்டத்தை செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
இது உங்களுடைய அரசு. நான் உங்களுடைய பிரதிநிதி. மக்களில் தேவைகளை நிறைவேற்றிட உறுதியாக உள்ளோம்.
மக்களின் வசதிக்காகத்தான் சமுதாயக் கூடங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சமுதாயக் கூடங்ளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது நமது கடமையாகும். இந்த கடமையை நிரைவேற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ராஜா, சித்தையன்கோட்டை பேரூராட்சித் தலைவர் திருமதி போதும்பொன்னு, துணைத்தலைவர் திரு.ஜாகீர்உஷேன், வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், செயல் அலுவலர் திருமதி ஜெயமாலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.