Close

TNSRLM-Exhibition-Dindigul

Publish Date : 06/03/2025

செ.வெ.எண்:-86/2025

நாள்:-28.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “விருப்பக் கண்காட்சி” திண்டுக்கல்லில் 01.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்டத்தின் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் கட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இடத்தில் 01.03.2025 அன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழவகைகள், கீரைகள், மூலிகை வகைகள், வாழைப்பழம், வாழைப்பூ, பாரம்பரிய அரிசி வகைகள் (மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, வாசனை சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மைசூர் மல்லி, காட்டுயாணம், ரத்தசாலி, தூயமல்லி மற்றும் கருங்குறுவை) வேர்க்கடலை, எள்ளு, தேங்காய், வேர்க்கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், வெல்லம், பாரம்பரிய அரசியில் செய்த அவல் வகைகள், நாட்டுக்கோழி, நாட்டுக்கோழி முட்டைகள், நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள், சிறுதானியம் (சாமை, தினை, வரகு, பனிவரகு, கேழ்வரகு, சோளம், கம்பு, குதிரைவாலி), கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, ஆவாரம்பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, மாம்பழம், நாட்டுமாடு பால், நெய், சிப்பிக்காளான், தேன் போன்றவற்றையும் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதற்கு உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே, மேற்படி இயற்கை சந்தையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.