மூடு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 18/06/2024

செ.வெ.எண்:-27/2024

நாள்:-13.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த கடன் திட்டங்கள் குடும்ப ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் திட்டம் 1 மற்றும் திட்டம் 2 என இரண்டு வகையில் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருந்தால் திட்டம் 1-ன் கீழ் கடன் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருந்தால் திட்டம் 2-ன் கீழ் கடன் வழங்கப்படும்.

1.தனிநபர் கடன்

திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000-மும், திட்டம் 2-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

2.கைவினைக் கலைஞர்களுக்கு கடன்

திட்டம் – 1-ன் கீழ் கைவினைக் கலைஞர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) வட்டி விகிதம் ஆண்டிற்கு ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு -4 சதவீதம். திட்டம் 2-ன் கீழ் கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது.

3.சுயஉதவிக் குழுக் கடன்

திட்டம் 1-ன் கீழ் சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

4.கல்விக்கடன்

சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் வட்டி, மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் அல்லது திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது அல்லது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.