மூடு

தமிழ்நாடு நாள்“ தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2024

செ.வெ.எண்:-65/2024

நாள்:-29.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

“தமிழ்நாடு நாள்“ தொடர்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள்” என கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்” எனஅறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க, நடப்பு நிதியாண்டில்(2024-25) தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடுநாளாக கொண்டாடுவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற வேண்டுமென தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 அன்று காலை 9.30 மணி முதல் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. கட்டுரைப் போட்டி “ஆட்சிமொழி தமிழ்” என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி ”1. குமரித் தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டுப் பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3.முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி” ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக கீழ்நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளபில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000, என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

இப்போட்டிகள் தொடர்பாக கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0451- 2461585 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.