மூடு

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

செ.வெ.எண்:-76/2024

நாள்: 27.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அன்னை தெரசா மகளிர் வளாகம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் 21.09.2024 முதல் 06.10.2024 வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களின் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் போன்ற பொருட்களும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைப்பதற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவு பரிசுகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் தயாரிக்கும் குழுக்களின் அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் 10.09.2024-ஆம் தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.