மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமான

வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025
.

செ.வெ.எண்:-52/2025

நாள்: 12.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நீலமலைக்கோட்டை ஊராட்சியில் ”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” பயனாளிகளுக்கு வீடு தேடி குடிமைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் சென்னையில் இன்று (12.08.2025) தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நீலமலைக்கோட்டை ஊராட்சியில் ”முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” பயனாளிகளுக்கு வீடு தேடி குடிமைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று குடிமைப்பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில், பெண்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று(12.08.2025) சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர். மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மண்டலத்தில் 1016 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட 64,190 குடும்ப அட்டைகளில் உள்ள 65,430 பயனாளர்களுக்கு, அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

வயதானவர்கள் நியாயவிலைக் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றால், கைரேகை பதிவு, கண்விழி பதிவு போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படுகிறது. அந்த சிரமங்களை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, மத்தி கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.