பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 13.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-48/2025
நாள்: 12.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 13.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக செப்டம்பர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 13.09.2025 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில்,
1. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கலாம்.
2. கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனு அளிக்கலாம்.
3. பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார் மனு அளிக்கலாம்.
4.தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் மனு அளிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி குறைதீர் முகாமில் கலந்து கொண்டு மேற்காணும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.