திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்
செ.வெ.எண்:-88/2025
நாள்: 20.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கப்பட்டு வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறும் பணி நடைபெற்று வருகிறது. சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று (20.11.2025) வியாழக்கிழமை 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் SIR படிவங்கள் நிரப்பவது மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மீள சமர்ப்பிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சிக்கந்தர் சுல்தான், தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) திரு.ஸ்ரீகாந்த் உள்ளிட இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய இடங்களில் வாக்குபதிவு அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர், மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குபதிவு அலுவலர் / வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.