மூடு

அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024
.

செ.வெ.எண்:-55/2024

நாள்:-25.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசின் நலத்திட்டங்களை பளியர் இன மக்கள் பெற்றிடும் வகையில் பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பளியர் இன மக்கள், அரசின் நலத்திட்டங்களை பெற்றிடும் வகையில், பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து இரண்டாவது நாளாக இன்று(25.06.2024) பழனி வட்டம், பாலசமுத்திரத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் அனைத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் பளியர் இன மக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து துணை ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் தேவைகள் கேட்டறிந்து, பளியர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் 24.05.2024-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும்(25.06.2024) சிறப்பு முகாம்கள் அந்தந்த கிராமங்களில் சம்பந்தப்பட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

வருவாய் துறையின் சார்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல் ஆணை, பிறப்பு இறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் ஓய்வூதியம், பிற ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் போன்றவைகள் உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இன்றையதினம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் மேற்கு வட்டம், தருமத்துப்பட்டி கிராமம், பிடாரிகளம் உட்கடை கிராமத்தில் பளியர் இன மக்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்த சிறப்பு முகாமில் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பளியர் இன மக்களுக்கு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்து உடனடியாக வழங்கப்பட்டது. அதேபோல், திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பன்றிமலை ஊராட்சி, தங்கமார்புரம் உட்கடை கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

பழனி வட்டம், குட்டிக்கரடு, பாலசமுத்திரத்தில் கத்தாலம்பாறை கிராமம், காவலப்பட்டி கிராமம், பொந்துப்புள்ளி உட்கடை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணியின் போது, பளியர் இன மக்கள் வீடு கட்டுவதற்கான மின்னனு பட்டா நகல்கள், இரண்டு குடும்பங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதிய அட்டைகள், புதிய வங்கி சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வங்கி புத்தகம் வழங்கப்பட்டன.

கொடைக்கானல் வட்டம், கூக்கால் கிராமம், பெருங்காடு உட்கிராமம், பூலத்தூர் கிராமம், மனத்தாவு உட்கடை கிராமம், பண்ணைக்காடு கிராமம், வடகரைப்பாறை, அடுக்கம் கிராமம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாமில் கள ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து பகுதி பளியர் இன மக்களுக்கும், அரசின் நலத்திட்டங்கள் கிடைத்திடும் வகையில், பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, பளியர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தரவுகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் 27.06.2024-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை பளியர் இன பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம்களில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், பழனி வட்டாட்சியர் திரு.எல்.சக்திவேலன் உட்பட அந்தந்த பகுதி பொறுப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.