மூடு

அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தேர்வில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருடன் ‘Coffee with Collector’ கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2025
.

செ.வெ.எண்: 54/2025

நாள்: 14.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தேர்வில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியருடன் ‘Coffee with Collector’ கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி, கடந்த 30.06.2025 அன்று அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கான முதலாவது நிகழ்ச்சி நடைபெற்றது. 07.07.2025 அன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம், பட்டமேற்படிப்பு பயிலும் மாணவியருடன் இரண்டாவது நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, இன்று(14.07.2025) மூன்றாவது நிகழ்வாக அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

மருத்துவம், பொறியியல் மட்டுமல்லாமல் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் மாணவியர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்றனர். உயர்கல்வி பயின்று பட்டங்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல் வாழ்வில் கூடுதலாக என்ன சாதிக்கிறோம் என்பதும் முக்கியம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாணவியர் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான வாய்ப்புகள் குறித்தும் மாணவியரிடம் கலந்துரையாடினார். புத்தகங்களை மட்டும் படிப்பதோடு நின்றுவிடாமல் தினமும் செய்தித்தாள் வாசிப்பது, அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்வது, வாழ்வில் முன்னேறுவதற்குத் தேவையான அனைத்து நல்ல விக்ஷயங்களையும் தேடி படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உயர்கல்விக்குப் பிறகான இலக்கு, தொலைநோக்குப் பார்வை முக்கியம் எனவும் அறிவுரை வழங்கினார். நேர்காணலை எதிர்கொள்ளும் திறன் மற்றும் வழிமுறைகளையும் அறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், மாணவியரின் இலட்சியம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்தும், அதில் முழு ஈடுபாட்டுடன் நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி பெற முடியும் என ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளன, அவற்றை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மாணவியர் தங்கள் எதிர்கால திட்டங்கள், இலக்குகள் குறித்தும், அவற்றை அடைவதற்கான வழிகாட்டுதல்கள் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் உற்சாகத்துடன் கலந்துரையாடினர். தற்சமயம் பெண்கள் கல்லூரிப் படிப்பிற்குச் செல்வது அதிகரித்துள்ளது என்றும், கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பதில் மாணவியர் தயக்கமோ குழப்பமோ அடையக் கூடாது எனவும், மகளிருக்கான அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தாம் சார்ந்த துறையில் சாதிப்பது தொடர்பான கனவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்,

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.வினோதினி, இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.