மூடு

‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2024

செ.வெ.எண்:-11/2024

நாள்:-05.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் ‘’இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்’’ ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்வு செய்யப்படும் பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலதனத்தில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்(PMFME) அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி (AIF)திட்டத்தின் கீழ் அனுமதிக்கக்கூடிய சுயதொழில்கள் நிறுவ வேண்டும். மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி / வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடைய இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

இதற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம், தொடங்கவுள்ள தொழில் குறித்த விவரங்கள் ஆகிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானியத்தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் உதவி பெற்றதற்கான சான்றிதழைக் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி (AIF) குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் (AGRISNET) இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலினை தேவையான ஆவணங்களோடு சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.