மூடு

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024
.

செ.வெ.எண்:-11/2024

நாள்:-10.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்(கால் மற்றும் வாய் நோய்) தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகள் உள்ளன. கால் மற்றும் வாய்(காணை) நோயானது, பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் பரவுவதுடன், இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், உமிழ்நீர் ஆகியவற்றால் காற்றின் மூலம் மற்றும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

இந்நோய் குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் கால்நடை வளரப்போருக்கு பொருளாதார இழப்பு அதிகளவில ஏற்படுகிறது.

இந்நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி, தனியே வேறு இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளின் கொட்டைகையை கிருமி நாசினியான 4 சதவீதம் சோடியம் கார்பனேட்(ஒரு வாளி தண்ணீரில் ஒரு கைப்பிடி சலவை சோடா) கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். நோயுள்ள பகுதியிலிருந்து புதியதாக கால்நடை வாங்கக்கூடாது.

வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்திட வேண்டும். சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்த நோயினை தடுக்க உகந்த வழி ஆகும். தடுப்பூசி போடுவதால் பால் கறவை இழப்பு நேரிடும் என்பது தவறான தகவலாகும். தடுப்பூசி போடாவிட்டால் கால்நடைகளை இழக்க நேரிடலாம்.

இந்நோய் வராமல் தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையால் அந்தந்த கிராம ஊராட்சிகளில் இன்று(10.06.2024) முதல் 21 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது. மேலும், விடுபட்ட கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தும் பணியானது 01.07.2024 முதல் 10.07.2024 வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆகவே, விவசாயப் பெருமக்கள் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசியினை தவறாது போட்டுக் கொண்டு, கால்நடைகளை பாதுகாத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.எஸ்.ராஜா, துணை இயக்குநர் மரு.ஆர்.ராம்நாத், உதவி இயக்குநர்கள் மரு.வி.விஜயகுமார், மரு.ஜெ.ராஜேஸ்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.