மூடு

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி – வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024
.

செ.வெ.எண்:-19/2024

நாள்:-17.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி – வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2024) நடைபெற்றது.

கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

“மலைகளின் இளவரசி” என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலா மலை வாசஸ்தலமாக விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தில் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தந்து சுற்றுலா இடங்களை கண்டுகளிக்கின்றனர்.

கோடைகாலத்தில் வருகை தரும் ஏராளமான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு கலை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உழைக்கும் மக்களின் சோர்வை போக்கும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும், அந்நியச் செலாவணியை ஈட்டவும், பொருளாதார பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சி மற்றும் கோடைவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடை விழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி இன்று(17.05.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 26.05.2024-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன.

மலர்க்கண்காட்சியில் மலர்ச்செடிகளை வளர்த்து பூக்கள் பூத்துக்குலுங்கின்ற வகையில் உயிரூட்டமான மலர்ச்செடிகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. 42 வகையிலான மலர் வகைகளுடன் சுமார் 5 இலட்சம் மலர்களுடன் இந்த மலர்க்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த 42 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களுக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு சுற்றுலா திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சுற்றுலாத்துறை சார்பில் கோடைவிழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளுர் மற்றும் வெளியூர் கலைஞர்கள் மூலம் பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெறவுள்ளது. விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

கொடைக்கானலில் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகள், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பி.சிவராம், கொடைக்கானல் சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ், கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பா.காயத்ரி, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.கார்த்திகேயன், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.பி.பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.