மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் 05.08.2021 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மற்றும் வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, பல்வேறு பரிசோதனைகள் ஆகியவை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படுகிறது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் ஏப்ரல்-2024 வரை திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் 2,80,540 நோயாளிகளும், பழனி சுகாதார மாவட்டத்தில் மட்டும் 2,63,269 நோயாளிகள் கண்டறியப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஏப்ரல்-2024 வரை, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், பரிசோதனை மூலமாக 2,61,343 உயர் ரத்த அழுத்த நோயாளிகளும், 1,15,527 சர்க்கரை நோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய 2 நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக 1,11,696 நோயாளிகளும் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தேவையான மருந்துப் பெட்டகங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முதுகு தண்டுவடம் செயலிழப்பு, மூட்டுத்தேய்மானம், பக்க வாதம், தசைச்சிதைவு நோய், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல் போன்ற சேவைகள் மற்றும் அதற்கென வட்டார அளவில் நியமிக்கப்பட்டுள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 31,486 நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சைகள், வயதானவர்கள், நடமாட முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நோயாளிகள் என 23,751 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான நோய் தடுப்மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 6 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல்-2024 வரை ஆக மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நோயாளியின் விபரம் சமுதாய நலப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகிறார்கள். இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடை நிலை சுகாதார சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.