திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
செ.வெ.எண்:-34/2025
நாள்: 10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 10.11.2025 காலை 08.00 மணி வரையில் 17,36,828 (90%) (பதினேழு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து எண்ணுற்று இருபத்தெட்டு) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவம் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு தீவிரமாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், மீதமுள்ள வாக்காளர்களுக்கு தொடர்ந்து கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு துறையில் பணிபுரியக்கூடிய தன்னார்வலர்கள் (Volunteers) வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு உதவிட இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், 11.11.2025 முதல் வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து மீள பெறும் பணி தொடங்கவுள்ளது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.