மூடு

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2024
.

செ.வெ.எண்:-26/2024

நாள்:-22.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(22.05.2024) நடைபெற்றது.

இந்தப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல்-2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சில்வார்பட்டி கிராமம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள், 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 24 சுற்றுகளிலும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 21 சுற்றுகளிலும், 129-ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 23 சுற்றுகளிலும், 130 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 20 சுற்றுகளிலும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 24 சுற்றுகளிலும், 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 21 சுற்றுகளிலும் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றம் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என மொத்தம் 84 அமைக்கப்படவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என மொத்தம் 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி இன்று(22.05.2024) அளிக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் 04.06.2024 அன்று காலை 06.00 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஆஜராகவும், அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு பணி நியமன உத்தரவு 03.06.2024 அன்று வழங்கப்படும். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 04.06.2024 அன்று காலை 06.00 மணிக்கு மேஜை ஒதுக்கீடு தேர்தல் பார்வையாளர் அவர்களால் வழங்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்கள் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காலை 7.45 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில் தயார்நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின்(சுற்று வாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மேஜைக்கும் உரிய கட்டுப்பாட்டு கருவிகளை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வருவதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலக உதவியாளர் அல்லது கிராம உதவியாளர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக பிரத்யேக வண்ணங்களில் சட்டமன்றத் தொகுதியின் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்க்கீடு செய்யப்பட்டுள்ள மேஜை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ள டி-சர்ட் வழங்கப்படும். இதன் மூலம் மேஜைக்குரிய கட்டுப்பாட்டு கருவிகளை எளிதில் அடையாளம் காண இயலும்.

காலை 07.55 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்குப்பதிவின் ரகசியம் தொடர்பான உறுதிமொழி ஏற்க வேண்டும்.  அதன்பின்னர் காலை 08.30 மணியளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.

தபால் வாக்குகள் எண்ணும் பணி 04.06.2024 அன்று காலை 08.00 மணியளவில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் மேற்கொள்ளப்படும். 04.06.2024 அன்று காலை 08.00 மணிக்கு முன்னர் வரை பெறப்படும் அனைத்து தபால் வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு எடுத்துவரப்பட்டு, எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்து வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளுதல், தபால் வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் வழிமுறைகள், தபால் வாக்குச்சீட்டுகளை தள்ளுபடி செய்யப்பட வேண்டிய இனங்கள், தபால் வாக்குச்சீட்டுகளை சீலிடுதல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன, என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.