மூடு

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024

செ.வெ.எண்:-05/2024

நாள்:-07.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள் மாணவர்களுக்கு ஒரு விடுதி, மாணவிகளுக்கு 6 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச்சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ2,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 14.06.2024-ஆம் தேதிக்குள்ளும், கல்லுாரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2024-ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.