மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025
.

செ.வெ.எண்:-44/2025

நாள்: 11.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, முடிவுற்ற திட்டபணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் இன்று (11.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, வடக்கு மேட்டுப்பட்டி, வீரக்கல் ஆகிய ஊராட்சிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, வீ.கூத்தம்பட்டி, வெள்ளை மாலைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்.

சுகாதாரத்துறையின் சார்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மேலும், உயர் சிகிச்சை தேவைப்படுவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மனு கொடுத்தால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள ரூ.30.00 இலட்சம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பிற உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இன்றைய முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், 8 பயனாளிகளுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, வீரக்கல் ஊராட்சி வடக்கு மேட்டுப்பட்டியில் புதிதாக சமூதாயக்கூடம் கட்டுவதற்கும் பணி, வீரக்கல் முதல் வடக்கு மேட்டுப்பட்டி வரை தார்சாலை அமைப்பதற்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டி வைத்து, வீ.கூத்தம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் வெள்ளை மாலைப்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள்திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.முத்துமுருகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.