மூடு

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024
.

செ.வெ.எண்:-47/2024

நாள்:-26.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் இன்று(15.08.2024) நடைபெற்ற, கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்புப் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கொத்தப்புள்ளி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து துறைகளின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், தனி நபர் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களை கிராமப்புறத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தெரிந்து கொண்டு, பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களின் அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவும், கிராம சபைக் கூட்டங்கள், மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கிராம சபை கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருட்கள் குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தங்களது கிராமங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆகவே தங்களது கோரிக்கைகளை தெரிவித்து கிராம வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், 18.12.2023-ஆம் தேதி முதல் 08.02.2024 வரை 59 முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மொத்தம் 21,584 மனுக்களில் 20,426 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் பட்டா கோரி இ-சேவை மையங்களில் ரூ.60 கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் போதும், உங்களுக்கான பட்டா வீடு தேடி வரும். முழுப்புலம் பட்டா எனில் 15 நாட்களிலும், உட்பிரிவு பட்டா எனில் 30 நாட்களிலும் வந்துவிடும். மேலும், உங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது கைப்பேசிக்கு தகவல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் மனுவின் நிலை குறித்து வீட்டிலிருந்தே அறிந்துகொள்ளலாம். மேலும், வருமான சான்று, வாரிசுச் சான்று, ஜாதிச்சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தாலே போதும், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், 6 ஆண்டுகளில் 8 இலட்சம் வீடுகள் வட்டி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,328 வீடுகள் கட்டப்படவுள்ளன. இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் வீடு பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்பட்சத்தில், அவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்திருந்தால் அவற்றை பழுது பார்க்கவும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பணியாளர்கள் வீடுவிடாக சென்று மருந்து தெளித்து வருகின்றனர். பணியாளர்கள் மருந்து தெளிக்க வரும்போது, வீட்டுஉரிமையாளர்கள் அவர்ளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கொசுக்களை ஒழித்து நோய் பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

அரசின் திட்டங்களை அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ரெட்டியர்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.சிவகுருசாமி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ராஜா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், துணை இயக்குநர்(வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) திரு.மாயக்கிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி பூங்கொடி, உதவிப்பொறியாளர்(மீன்வளத்துறை) திருமதி இந்துசாரா, வட்டார மருத்துவ அலுவலர் ஆராதனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.எஸ்.கிருஷ்ணன், திரு.மலரவன், கொத்தப்புள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுந்தரி அன்பரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.