மூடு

>கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2024

செ.வெ.எண்:-12/2024

நாள்:-05.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

கிறித்துவ தேவாலயங்களில் கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் வருமாறு:-

கிறித்துவ தேவாலயங்களில் சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பணிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானியத்தொகை விவரம் வருமாறு:-

10 முதல் 15 வருடம் வரையிலான தேவாலய கட்டடங்களுக்கான மானியம் ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.10.00 இலட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரையிலான தேவாலய கட்டடங்களுக்கான மானியம் ரூ.4.00 இலட்சத்திலிருந்து ரூ.15.00 இலட்சமாகவும், 20 வருடத்திற்கு மேலான தேவாலய கட்டடங்களுக்கான மானியம் ரூ.6.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்காக நிதி உதவி கோரும் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நிதி உதவி கோரி பெறப்படும் விண்ணப்பங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு மூலம் பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறித்துவ தேவாலயங்களில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.