மூடு

குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ திரவம் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

செ.வெ.எண்: 58/2026

நாள்: 23.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் எ.எம்.சி சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் எ.எம்.சி சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று (23.02.2026) தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் எ.எம்.சி சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் துவக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையத்தில் வருகின்ற 28.02.2026 வரை வைட்டமின் ஏ திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோராயமாக 1,29,862 குழந்தைகள் உள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 2,021 அங்கன்வாடி மையங்களிலும் வருகின்ற 28.02.2026 வரை வைட்டமின் ஏ திரவம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் வைட்டமின் ஏ திரவம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மி.லி அளவும், 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மி.லி அளவும் இந்தத் திரவம் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு கண் குருடு ஏற்படுவதைத் தடுக்கவும், மாலைக்கண் நோய் வராமல் பாதுகாக்கவும், குடல், சிறுநீர்பாதை, சுவாசப்பாதை மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் இந்த வைட்டமின் ஏ திரவம் உதவுகிறது. குழந்தைகளின் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி மற்றும் புத்திக் கூர்மைக்கு இந்த நுண்சத்து மிகவும் இன்றியமையாததாகும்.

பெற்றோர்கள் வைட்டமின் ஏ திரவத்தால் தங்களது குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏதும் உண்டாகக் கூடும் என்று எண்ணி அச்சப்பட வேண்டாம். இந்த வைட்டமின் ஏ திரவத்தால் குழந்தைகளுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே, பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு இந்த வைட்டமின் ஏ திரவத்தைப் புகட்டி, ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்குவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஆர்.செல்வக்குமார், மாநகர் நல அலுவலர் மரு.ராம்குமார், ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.பூங்கொடி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் திருமதி.எஸ்.உமாமகேஸ்வரி, உதவி இயக்குநர் (பிறப்புஇ இறப்பு) திருமதி.சாந்தினி அவர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.