மூடு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026

செ.வெ.எண்:-54/2026

நாள்:-17.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2026 அன்று நடத்தப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி பிப்ரவரி-2026ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2026 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30-மணிக்கு நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பல முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களின் சுயவிபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும் ஒளிநகல் (ஜெராக்ஸ்)-களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவசத் திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார்துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், தொழிற்பழகுநர் பயிற்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறும் மற்றும் முகாம் தொடர்பான விபரங்களை அறிய DINDIGUL EMPLOYMENT OFFICE எனும் டெலிகிராம் சேனலில் இணையவும். மேலும் விபரங்களுக்கு 9499055924 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணத்தைக் கொண்டும் இரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.