மூடு

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

செ.வெ.எண்:-44/2024

நாள்:-21.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களைத் தலைவராகவும், திரு. இராசா.அருண்மொழி அவர்களைத் துணைத்தலைவராகக் கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் போன்ற நலத்திட்டங்கள் கடந்த 2008–ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டு) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.