மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில், 12வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025
.

செ.வெ.எண்:-13/2025

நாள்:-03.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், 12வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(03.07.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா(2025) திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.08.2025 அன்று தொடங்கி 07.09.2025 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புத்தகத் திருவிழா குறித்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் அனைவரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் செய்திட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகத் திருவிழா தொடர்பாக கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்கச் செய்ய வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழா அரங்கில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய கடைகள் அமைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். மருத்துவம், தீயணைப்பு, அவசர ஊர்தி வசதி ஆகிவை ஏற்பாடு செய்திட வேண்டும்.

புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் 09.06.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு பிரச்சாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகச்சிறுக பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 32,000 உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு பணத்திலிருந்து புத்தகம் வாங்கும் மாணவ, மாணவிகளுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது.

புத்தகத் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறை அலுவலர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை எவ்வித தொய்வுமின்றி செய்து, ஒத்துழைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் முனைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.