மூடு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த, “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 95 அயலகத் தமிழ் இளைஞர்கள் குழுவினரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்று கலந்துரையாடினார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025
.

செ.வெ.எண்:-50/2025

நாள்:-11.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த, “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளை சேர்ந்த 95 அயலகத் தமிழ் இளைஞர்கள் குழுவினரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்று கலந்துரையாடினார்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் வருகை தந்த, 14 நாடுகளை சேர்ந்த 95 அயலகத் தமிழ் இளைஞர்கள் குழுவினரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.08.2025) வரவேற்று, கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் சுற்றுலா சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சிறந்த ஆன்மிகத் தலமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பூட்டுத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் சுவையான பிரியாணிக்கும் சிறந்த மாவட்டமாகும், என தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த 95 அயலகத் தமிழ் இளைஞர்கள் குழுவின் தமிழ் பண்பாட்டு பயணத்தை 01.08.2025 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள். இந்த குழுவினர் 15.08.2025 வரை தமிழ்நாடு முழுவதும் பல்வெறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் “மரபின் வேர்களோடு” உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, தமிழின் தொன்மை, தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் போன்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.05.2023 அன்று சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.

அதன் அடிப்படையில், இந்த பண்பாட்டு பயணம் அயலகத் தமிழர் நலத்துறையினால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 நாடுகளைச் சேர்ந்த 194 தமிழ் இளைஞர்களைக் கொண்ட மூன்று கட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் நான்காம் கட்ட பயணமாக, பிஜி, ரீயூனியன், மார்டினிக், குவாடலூப், இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, மியான்மர், மொரிஷியஸ், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் ஜெர்மனி ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்த 98 அயலகத் தமிழ் இளைஞர்கள் 01.08.2025 அன்று முதல் 15.08.2025 வரையிலான பதினைந்து நாட்களுக்கு பண்பாட்டுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் குழுவினர், இன்று(11.08.2025) திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இங்கு பண்பாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு கோயம்புத்துார் செல்கின்றனர்.

இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள் அவர்களது நாட்டிற்கு சென்ற தமிழ்நாட்டின் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர், என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.