திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-25/2025
நாள்:-06.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம், அகரம் மற்றும் கிரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை இன்று (06.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வீடுதோறும் சென்று வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணி 04.11.2025-அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வருகின்ற 04.12.2025-அன்று வரை வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் வழங்கி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 (நான்கு இலட்சத்து பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து ஒன்பது) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்களுக்கு தொடர்ந்து கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இப்பணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு துறையில் பணிபுரியக்கூடிய தன்னார்வலர்கள் (Volunteers) வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு உதவிட இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. படிவங்கள் அனைத்தும் வழங்கப்பட்ட பின்னர் அவற்றினை பூர்த்தி செய்து மீள பெறும் பணி நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக தங்களது வீடு தேடி வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., வாக்குப்பதிவு அலுவலர் திரு.க.செந்தில்வேல், ஆத்தூர் உதவி தேர்தல் அலுவலர் திரு.முத்து முருகன் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.