மூடு

பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024

செ.வெ.எண்:-04/2024

நாள்:-02.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிடுவற்கு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டிற்கு பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 250 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பழத்தோட்டம் மற்றும் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.3,000 வீதம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், குறைந்தது 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்தரும் தீவனப்பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு, குறைந்தது 3 வருடகாலம் பராமரிக்க வேண்டும்.

பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி, திட்ட விவரங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பத்தினை 15.07.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.