மூடு

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 11/07/2024
.

செ.வெ.எண்:-14/2024

நாள்:-05.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில் காரீப் பருவமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நெல் –I, மக்காச்சோளம் – I, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி- I பயிர்களில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தை SBI General Insurance Company Ltd., நிறுவனம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் மொத்தமாக 111 குறு வட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்.

காரீப் பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி காலமானது ஜுன் மாதத்தில் தொடங்குவதினால் ஜுன் மாதம் முதலாக பயிர் வாரியான அடங்களுடன் பயிர் காப்பீடு பதிவு மேற்கொள்ளலாம்.

நெல்-I பயிரானது 31.07.2024-ஆம் தேதியும், சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம்-I பயிர்களுக்கு 16.09.2024-ஆம் தேதியும் மற்றும் பருத்தி-I பயிருக்கு 30.09.2024-ஆம் தேதியும் பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர் காப்பீட்டு தொகையானது, நெல்- I பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.712, பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.35,600, மக்காச்சோளம்- I பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.600, பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.30,000, சோளம் பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.220, பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.11,000, நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.530, பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.26,500, பருத்தி- I பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.526.46 பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.10,529.15 ஆகும். அறிவிக்கப்பட்ட இறுதிநாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணதொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் அலுவலர்களிடம் தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் திரு.அனுசுயா உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.