மூடு

மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – பொங்கல் பரிசு விநியோகம்.

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
.

செ.வெ.எண்: 28/2026

நாள்: 10.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, புகையிலைப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றிய நியாயவிலைக்கடை என 4 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (10.01.2026) திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, புகையிலைப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றிய நியாயவிலைக்கடை என 4 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் 08.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாய விலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதற்கு ரூ.2.63 கோடியும், ரொக்கம் ரூ.3000/- வழங்குவதற்கு ரூ.208.24 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 51 ஆயிரம் பயனாளிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், 13.12.2025-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தின் மூலம் கள்ளிமந்தையத்தில் மட்டும் 400 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது. வருகின்ற 15.02.2026-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புகையிலைப்பட்டி பிரிட்டோ உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.23.47 இலட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீ ராகவ் பாலாஜி, திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் திரு.சிற்றரசு, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.மா.செல்வக்குமார், நத்தம் கூட்டுறவு சார்பதிவாளர் திரு.கி.அன்பரசன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.