மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024
.

செ.வெ.எண்:-72/2024

நாள்:26.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை இன்று(26.08.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்கள், தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவிநியோக திட்டத்திற்காக கடந்த ஆண்டு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.10,500 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் 93,396 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 52,794 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 8,858 விண்ணப்பங்களில் 3,933 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் இதுவரை 7,704 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 1,039 விண்ணப்பங்களில் 857 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் வட்டத்தில் புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 689 விண்ணப்பங்களில் 502 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சரிபார்ப்பு பணி முடிவடைந்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

குடிமைப்பொருட்களை பெற பொதுமக்கள் நீண்டதுாரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே புதிய நியாயவிலைக்கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல்வேறு இடங்களில் நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 739 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 1376 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என 2115 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 62 முழுநேர நியாயவிலைக்கடைகள், 165 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 7 நடமாடும் நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 234 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 11 முழுநேர நியாயவிலைக்கடைகள், 61 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் ஒரு நடமாடும் நியாயவிலைக்கடை என மொத்தம் 73 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட 676 அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்காக 350 மெ.டன் நெல்லை சேமித்து வைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் செமிகுடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்க மாதந்தோறும் 3.60 இலட்சம் மெ.டன் அரிசி தேவையுள்ளது. இதில் 75,000 மெ.டன் அரிசி தனியாரிடம் கொள்முதல் செய்யப்பட்டு நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் மாதந்தோறும் 23,000 மெ.டன் கோதுமை தேவையுள்ளது. அதில் 8,000 மெ.டன் கோதுமைதான் ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வருகிறது. இன்னும் 15,000 மெ.டன் கோதுமையை வழங்க கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க, நிரந்தர வீடுகள் வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,445 வீடுகள் கட்டப்படவுள்ளன.

ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் 30 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 கல்லுாரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், ஒரு தொழிற்பயிற்சி நிலையம், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 2 கல்லுாரிகள், பழனியில் ஒரு சித்தா கல்லுாரி, ஆகியவை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியில் விரைவியல் அரசு கல்லுாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம், ஆத்துாரில் கல்லுாரிகள் தொடங்கப்பட்டு, அந்த கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற வகையில் வழங்கப்படும்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மேம்படுத்தப்பட்டு வருகிற்ன. விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.