மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் – அடிக்கல் நாட்டி மற்றும் நிறைவு செய்யப்பட்ட திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2026

செ.வெ.எண்: 69/2026

நாள்: 25.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, புளியராஜக்காபட்டி ஊராட்சியில் 13 பயனாளிகளுக்கும், கோடல்வாவி ஊராட்சியில் 129 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி, டி.பண்ணைப்பட்டி, எம்.அம்மாபட்டி ஆகிய ஊராட்சிகள் மற்றும் கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிகளில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(25.02.2026) திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, புளியராஜக்காபட்டி ஊராட்சியில் 13 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1,500 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை என்ற விகிதத்தில் இருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக் கடையினை உருவாக்கி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 09.01.2026-அன்று ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்றைய தினம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி, அலவாச்சிப்பட்டியில் ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்டப்பகுதி (2024-2025) திட்டத்தின்கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதயாக்கூடம், கரிசல்பட்டி ஊராட்சி, பழைய கன்னிவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கிழ் (2024-2025) ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்கள்,

பழைய கன்னிவாடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் (2025-2026) ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டடம், பழைய கன்னிவாடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் (2025-2026) ரூ.9.96 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை, டி.பண்ணப்பட்டி ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட வருவாயின் திட்டப்பகுதி (2024-2025) திட்டத்தின்கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடம், எம்.அம்மாபட்டி ஊராட்சி மேலப்பட்டியில் சுரங்கத்திட்டத்தின்கீழ்(2024-2025) ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டடம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தொடர்ந்து, புளியராஜக்காபட்டி ஊராட்சியில் 13 பயனாளிகளுக்கும், கோடல்வாவி ஊராட்சியில் 129 பயனாளிகளுக்கும் என மொத்தம் 142 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.கண்ணன், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தலைவர் திரு.சகிலராஜா, துணைத்தலைவர் திரு.முருகேசன், கன்னிவாடி பேரூராட்சி தலைவர் திருமதி தனலட்சுமி சண்முகம், துணைத்தலைவர் திரு.கீதா முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.