மூடு

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 30/06/2025
.

செ.வெ.எண்:-106/2025

நாள்:-27.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம்(2025-2026), கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(27.06.2025) நடைபெற்றது.

தேசிய சுகாதார குழுமம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய மதிய உணவுத் திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், மறுசீர் அமைக்கப்பட்ட விநியோகத்துறை அமைப்புத் திட்டம், மண் சுகாதார அட்டை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னணு-தேசிய வேளாண் சந்தை, பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம்-வேளாண்மைத்துறை, தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி விவசாய நுண்ணீர் பாசனத் திட்டம்-தோட்டக்கலைத்துறை, பாரம்பரிய வேளாண் அபிவிருத்தித் திட்டம், பாரத பிரதமர் கிசான் சமான் நிதித் திட்டம், தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி(எஸ்.எஸ்.ஏ.,), பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா(திறன் வளர்ப்பு பயிற்சி), தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா(திறன் வளர்ப்புப் பயிற்சி), தேசிய பாரம்பரிய நகர வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்(பேரூராட்சிகள்), அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்(நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்), பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், துாய்மை பாரத இயக்கம்/நகர்ப்புறம்(மாநகராட்சி), துாய்மை பாரத இயக்கம்/ நகர்ப்புறம் (பேரூராட்சி), துாய்மை பாரத இயக்கம் கிராமின், பாதாள சாக்கடை திட்டம் – அம்ரூத் திட்டம், அழகிய நகர மயமாக்கல் பணி, பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம், தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யக்ரம், நில அளவை ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டம், டிஜிட்டல் இந்தியா-இணைய சேவை வழங்கும் திட்டம், கேலோ இந்தியா, நேரு யுவகேந்திரா, பிரதம மந்திரி கிராமின் அவாஸ் யோஜனா, பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதான் மந்திரி ஜன் விகா காரியா கிராம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு ஒன்றிய அரசுத் திட்டங்களின் பயன்பாடு, முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது:-

ஒன்றிய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின்(DISHA) பணியாகும். ஒன்றிய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்பாடுகளை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் இந்தக்குழு செயல்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசுத் திட்டங்களை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2025-26-ஆம் நிதியாண்டிற்கான முதல் காலாண்டிற்கான கூட்டம் இன்று(27.06.2025) நடத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களில் இருந்து 2023-2024, 2024-2025, 2025-2026-ஆம் நிதியாண்டுகளுக்குரிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தரமான அனைவருக்குமான கல்வி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள், நுண்ணீர் பாசனத்தை மேம்படுத்துதல், மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடி சந்தைப்படுத்தும் இணையவழி வர்த்தகம் வழிவகை செய்யப்பட்டு, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் விற்பனை செய்து, உரிய விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தரமான நெல் விதைகள், தரமான உயிர் உரங்கள், பயறு வகை உற்பத்தியை அதிகரித்தல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர் இளம் பருவத்தினருக்கான ஊட்டச்சத்து மேம்படுத்துதல், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்கான திட்டம், கருவுற்ற மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளிலுள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில், ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை குறைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக துாய்மை பாரத இயக்கம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியாளிப்பு திட்டம் (MGNREGA) கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை குறிப்பிடத்தக்க முறையில் உயர்த்தி, வறுமை ஒழிப்பு திட்டமாக உள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்புகள் அதிகரித்து, ஏழ்மை குறைந்து, வேலைவாய்ப்பு அட்டைதாரர்களின் குடும்பங்களில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கிடைப்பதால், அவர்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி நிலை, சேமிப்பு பழக்கம் ஆகியவை வளர்ந்துள்ளன. ஏராளமானோர் தங்களது சொந்த கிராமத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றதால் இடம்பெயர்வும் குறைந்துள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு குடும்பத்தினரிடையே நல்ல மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கிறது. இதுபோன்ற விஷயங்களை தொகுத்து திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் அவர்கள் தொகுத்த புத்தகம் “தின்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பும் வாழ்க்கைத் தரமும் மேம்படுவதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் தாக்கம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 17 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாதனைப் படைத்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 13 வயது குழந்தை சேப்டிபின் விழுங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவக்குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, காப்பாற்றியுள்ளனர்.

இதுபோன்று சிறப்பாக சேவை புரியும் துறைகளையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த கூட்டத்தில் கௌரவிக்கப்படும், என திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், பொதுமருத்துவம் ஆகிய துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் திட்டங்களாக இருந்தாலும், மாநில அரசின் திட்டங்களாக இருந்தாலும் குறித்த காலத்திற்குள் தரமான வகையில் முடிக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பாக செயலாற்றிட வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.