மூடு

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2024
.

செ.வெ.எண்:-29/2024

நாள்:-27.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல்-2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சில்வார்பட்டி கிராமம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், தரைத்தளத்தில், திண்டுக்கல் மற்றும் பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், முதல் தளத்தில் நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரண்டாம் தளத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கை காலை 08.00 மணிக்கு தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை 04.06.2024 அன்று காலை 07.00 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். பாதுகாப்வு அறை திறக்கப்படுவது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு கொண்டுவரப்படுவது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், வாக்குகள் எண்ணும் உதவியாளர் ஒருவர் மற்றும் நுண்பார்வையாளர் ஒருவர், மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் அல்லது கிராம உதவியாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பர்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணிகள், சட்டமன்றம் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் என மொத்தம் 84 அமைக்கப்படவுள்ளது. 127-பழனி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 24 சுற்றுகளிலும், 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 21 சுற்றுகளிலும், 129-ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 23 சுற்றுகளிலும், 130 நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 20 சுற்றுகளிலும், 131-நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 24 சுற்றுகளிலும், 132 திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகளை 21 சுற்றுகளிலும் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என மொத்தம் 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணும் நாளன்று, வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 15 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வீதம் 90 முகவர்களும், அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணும் மேஜைக்கு 9 முகவர்களும் என மொத்தம் 99 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பட்டியலை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் விண்ணப்பப் படிவம் 18-ல் வாக்கு எண்ணிக்கை முகவர்களின் பெயர் 2 பிரதிகளில் ஒரு பிரதியினை முகவர்களின் புகைப்படத்துடன் அவர்களது முகவரி ஆகிய விவரங்களை நிரப்பி கையொப்பமிட்டு உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். முகவர்களின் கையொப்பம் பெற்று சட்டமன்ற தொகுதிக்கு 15 முகவர்களை தனியாகவும், அஞ்சல் வாக்குச் சீட்டுகளுக்கு தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். முகவர் படிவம் 18 மற்றும் அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு(காலை 8.00 மணிக்கு) ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகை தர வேண்டும். மொபைல் போன், லேப்டாப், வீடியோ கேமரா போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துவரக் கூடாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கவனிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனத்தை ரத்து செய்ய படிவம் 19-ல் மனு அளிக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்குள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர், தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரது முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி, சுயேட்சை வேட்பாளரது முகவர்கள் என்ற வரிசையில் அனுமதிக்கப்படுவர்.

வேட்பாளரோ அல்லது அவரது தேர்தல் முகவரோ வாக்கு எண்ணிக்கை மையத்தில் எந்தவொரு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை அறைக்கும் செல்லலாம். வாக்கு எண்ணிக்கை முகவர்கள் புகைப்பிடிக்கக் கூடாது. மது அருந்திவட்டு வரக்கூடாது. அவ்வாறு ஒழுக்கத்தை கடைப்பிடிக்காத நபர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கை 04.06.2024 அன்று காலை காலை 08.00 மணிக்கு தொடங்கப்படும். காலை 08.00 மணி வரை பெறப்படும் ETPBs அஞ்சல் வாக்குகள் அனைத்தும் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சுற்றில் 500 அஞ்சல் வாக்குகளுக்கு தலா ஒரு மேஜை வீதம் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும் ஒன்பது மேஜைகளில் இரண்டு சுற்றுகளாக எண்ணப்படும்.

ETPBs – இராணுவ சேவையில் உள்ள வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து வரப்பெறப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டுகள் ஒரு மேஜையில் QR கருவி மூலம் ஸ்கேன் செய்த பின்னர் எண்ணப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கு நியமனம் செய்யப்பட்ட முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜை அருகில் இருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும்.

அஞ்சல் வாக்குச்சீட்டில் உறுதிமொழியில் வாக்காளர் கையொப்பம் இல்லாமல் இருத்தல், வாக்காளர் கையொப்பம் உரிய அலுவலரால் சான்றொப்பம் செய்யப்படாமல் இருத்தல், உறுதிமொழிப் படிவம் 13(ஏ) மற்றும் 13(பி) கவர் உறையில் வாக்குச்சீட்டு வரிசை எண் மாறுபாடாக இருத்தல் போன்றவை கண்டறியப்பட்டால் அந்த அஞ்சல் வாக்குச்சீட்டு தள்ளுபடி செய்யப்படும். மேலும், எவருக்கும் வாக்களிக்காத வாக்குச்சீட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களக்கு வாக்களிக்கப்பட்டிருத்தல், போலி வாக்குச்சீட்டு என கண்டறிந்தால், சிதலமடைந்த அல்லது சேதமடைந்த வாக்குச்சீட்டு, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உறை மூலமாக அனுப்பி வைக்கப்படாத வாக்குச்சீட்டு, வேட்பாளர் எவர் என அறிந்துகொள்ள இயலாத வகையில் குறியீடு செய்யப்பட்டிருத்தல், வாக்காளரை குறிக்கும் வகையில் குறியீடு அல்லது எழுத்து மூலமாக எழுதப்பட்டிருத்தல் போன்ற காரணங்களால் அஞ்சல் வாக்குச்சீட்டு தள்ளுபடி செய்யப்படும். அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் படிவம் 20-ல் அறிக்கை தயார் செய்து அனைத்து முகவர்களுக்கும் நகல் வழங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணப்படும் மேஜைக்கு வாக்குச்சாவடி எண்களின் வரிசைப்படி 14 மேஜைக்கு 14 கட்டுப்பாட்டு கருவிகள் வீதம் ஒவ்வொரு சுற்றுக்கும் வழங்கப்படும்.

பாதுகாப்பு அறையிலிருந்து எடுத்து வரப்படும் கட்டுப்பாட்டு கருவிகள் வாக்கு எண்ணப்படும் மேஜையில் முகவர்களின் முன்னிலையில் முத்திரைகள் சரியாக உள்ளனவா என சரிபார்க்கப்பட்ட பின்னரே திறக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முத்திரை திறக்கப்பட்ட பின்னர் ON செய்து Result பொத்தானை அழுத்திய பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திரையில் தெரியும் வேட்பாளர்கள் வாரியான வாக்குகள் எண்ணிக்கையினை முகவர்கள் பார்க்கும் வண்ணம் காண்பிக்கப்படும். கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ண Swithch On செய்த பின்னரும் வேலை செய்யவில்லை எனில் பேட்டரி பகுதியை திறந்து புதிய பேட்டரி பொருத்தப்படும். அதன்பின்னரும் வேலை செய்யவில்லை எனில் அந்த இயந்திரத்ததை உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைத்துவிட்டு அடுத்த இயந்திரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படும். அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட பின்னர் வேலை செய்யாத கட்டுப்பாட்டு கருவிகளுக்குரிய வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்களில் சேகரமாகியுள்ள காகித சீட்டுகளை எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.

அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட பின்னரே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் வீதம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு உறுதிசெய்யும் இயந்திரத்தில்(VVPAT) சேகரமாகியுள்ள காகித சீட்டுகளை வேட்பாளர்கள் வாரியாக எண்ணி அவற்றினை கட்டுப்பாட்டு கருவியில் பதிவாகியுள்ள வேட்பாளர்கள் வாரியாக வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்பார்வையாளர்கள் வேட்பாளர் வாரியாக பெறப்பட்ட வாக்கு விபரங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திரையினை பார்த்து 17சி பகுதி-2 படிவத்தில் பூர்த்தி செய்வர். இப்படிவம் கார்பன் தாள் வைத்து 2 பிரதிகள் தயார் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட 17சி பகுதி-2 படிவத்தில் முகவர்களிடம் கையொப்பம் பெறப்படும். அதன்பின்னர் 17சி பகுதி-2 படிவம் நகல் எடுத்து முகவர்களுக்கு வழங்கப்படும்.

சுற்றுவாரியான வாக்கு எண்ணிக்கை விபரங்கள் உரிய படிவத்தில் தயார் செய்யப்பட்டு அதன் பிரதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அருகில் உள்ள வேட்பாளர் அல்லது முதன்மை முகவருக்கு வழங்கப்படும். தகவல் பலகையிலும் அதன் விபரம் வெளியிடப்படும். ENCORE செயலியிலும் பதிவு செய்யப்படும். அதன் பின்னரே அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் விவர படிவம் ஒவ்வொரு சுற்றுக்கும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர் மேஜையில் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு ஒட்டுமொத்த நாடாளுமன்ற தொகுதிக்கும் சுற்று வாரியான வாக்குகள் விவரம் தயார் செய்யப்பட்டு ஒலிபெருக்கி மற்றும் தகவல் பலகை வாயிலாக தெரிவிக்கப்படும். அதன் ஒரு பிரதி தேர்தல் அலுவலருக்கு அருகில் உள்ள வேட்பாளர் மற்றும் முதன்மை முகவருக்கு வழங்கப்படும்.

வெற்றி பெற்ற வேட்பாளருக்கான அறிவிப்பு அனைத்து சுற்றுகளும் முடிவடைந்த பின்னர் படிவம் 20-ல் சட்டமன்றத் தொகுதிவாரியாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அதனுடன் அஞ்சல் வாக்குகள் விபரம் சேர்த்து ஒட்டுமொத்த நாடாளுமன்றத் தொகுதிக்கும் வேட்பாளர் வாரியாக வாக்குகள் விவரம் ஒலிபெருக்கு மூலமாகவும், தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.

அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் படிவம் 21சி-ன் படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். அதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளருக்கு படிவம் 22-ன் படி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வேட்பாளர் அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் வடங்கப்படும். தேர்தல் வெற்றி பெற்றமைக்கான சான்றினை பெறுவதற்கு வேட்பாளர் மற்றும் அவருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடித்து, வரும் ஜுன் 4-ம் தேதி அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நடத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு.சக்திவேல்(திண்டுக்கல்), திருமதி மு.முருகேஸ்வரி(நத்தம்), திரு.சரவணன்(பழனி), திரு.பால்பாண்டி(ஒட்டன்சத்திரம்), திரு.மாரி(நிலக்கோட்டை), திருமதி கங்காதேவி(ஆத்துார்), வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.