மூடு

‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 04/10/2025
.

செ.வெ.எண்:-113/2025

நாள்:-29.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 22.09.2025 வரை 13 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 275 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (29.09.2025) கல்லூரி மாணவ/மாணவியருடன் பதினான்காவது நிகழ்வாக ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சார்ந்த 25 மாணவ/மாணவியர் கலந்து கொண்டனர். மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

மாணவ/மாணவியரிடம் அவர்களின் இலட்சியம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்தும், அதில் முழு ஈடுபாட்டுடன் நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி பெற முடியும் என ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளன, அவற்றை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மாணவியர் தங்கள் எதிர்கால திட்டங்கள், இலக்குகள் குறித்தும், அவற்றை அடைவதற்கான வழிகாட்டுதல்கள் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடினர்.

தற்சமயம் பெண்கள் கல்லூரிப் படிப்பிற்குச் செல்வது அதிகரித்துள்ளது என்றும், கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பதில் மாணவியர் தயக்கமோ குழப்பமோ அடையக் கூடாது எனவும், மகளிருக்கான அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். தாம் சார்ந்த துறையில் சாதிப்பது தொடர்பான கனவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார், போட்டித்தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய தேர்வுவினாத்தாட்களைக் கொண்டு பயிற்சி பெறுதல், மாதிரித்தேர்வுகள் எழுதுதல், அன்றாட நிகழ்வுகளை அறிதல், தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளல், தொழில்முனைவோர் ஆவதற்கான படிநிலைகள், நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்துதல், வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளல், தினசரி செய்தித்தாள் வாசித்தல், பாதுகாப்புத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள், உயர்ந்த இலக்குகளைத் தீர்மானித்தல், குறிக்கோளில் தெளிவு, விடாமுயற்சியுடன்கூடிய உழைப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.