மூடு

அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், பழனி

வழிகாட்டுதல்

பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.

முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

மேலும் அறிய : http://www.palanimurugantemple.tnhrce.in/index.html

புகைப்பட தொகுப்பு

  • இரவு ஒளியில் பழனி திருக்கோயில்
  • கம்பி வட ஊர்தி
  • வான் பார்வை பழனி திருக்கோயில்

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள் ரயில் நிலையம் பழனி.

சாலை வழியாக

திண்டுக்கல் மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.