Close

AD-Mines – Agri Farmers- Notification

Publish Date : 15/07/2024

செ.வெ.எண்:-27/2024

நாள்:-10.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பொறியாளர், நீ.வ.து / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள 273 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டு எண்.7, நாள்: 27.06.2024-ன் படி பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்காணும் நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மண் எடுக்க சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களே, இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் அரசால் அரசாணை எண் 14, இயற்கை வளங்கள் (எம்எம்சி1) துறை, நாள். 12.06.2024- இன் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மண் தேவைப்படும் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தாம் வசிக்கும் வட்டத்தின் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளிலிருந்து மண் எடுத்திட இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுத்து தமது வயல்களை வளம் பெறச் செய்வதோடு, மண்பாண்டத் தொழிலாளர்களும் தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாய பயன்பாட்டிற்காக மண் / வண்டல் மண் எடுத்து செல்ல விண்ணப்பிக்கும் நபர் தங்களது நில ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்கள் வருவாய் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ் நில ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய வட்டாட்சியரால் மண் / வண்டல் மண் எடுக்க 30 நாட்களுக்கு மிகாமல் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படும்.

விவசாய பயன்பாட்டிற்கென நஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 185 கன மீட்டர் அளவிலும் புஞ்சை நிலத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது ஒரு ஹெக்டருக்கு 222 கன மீட்டர் அளவிலும், மண்பாண்டம் தயாரித்திட 60 கன மீட்டர் அளவிலும் மற்றும் சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமில்லாமல் வண்டல் மண் / மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.