Close

The Hon’ble Food and Civil Supply Minister – Kalaignar Kanavu Illam – Function

Publish Date : 13/08/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:10.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் முன்னிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை இன்று(10.08.2024) வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இவ்விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்துள்ளார்கள்.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. மேலும், ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் 08.07.2024 முதல் 02.08.2024 வரை பல்வேறு கட்டங்களாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 307 வீடுகள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 937 வீடுகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 306 வீடுகள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 824 வீடுகள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 433 வீடுகள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 732 வீடுகள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 165 வீடுகள், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகள் என மொத்தம் 5891 வீடுகளுக்கு ஏற்கனவே நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

தற்போது, ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி, தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியப்பட்டு, தேர்வு செய்யப்பட்டு, புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 132 வீடுகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 93 வீடுகள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 வீடுகள், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 60 வீடுகள், என மொத்தம் 437 பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படவுள்ளது.

ஆகமொத்தம் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,328 வீடுகள் கட்டப்படவுள்ளன.

இன்றையதினம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 241 வீடுகள், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 343 வீடுகள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 165 வீடுகள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 433 வீடுகள், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 170 வீடுகள் என மொத்தம் 1352 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைவசதி, குடிநீர் வசதி, கல்வி, சுகாதாரம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் இணைகின்ற இடத்தில் உபரியாக வெளியேறும் தண்ணீரை, நீரேற்றம் செய்து குழாய்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்துார், ஆத்துார், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.1.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதன்படி, இத்திட்டம் தொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு முடிந்து அறிக்கை வந்தவுடன், திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லா குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது பகுதி வறட்சியான பகுதி. “மரத்தை வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்“ என்று கலைஞர் கூறியுள்ளார்கள். எனவே, அனைவரும் மரம் வளர்ப்பதில் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறம்பாடி, புதுக்கோட்டை, கோவில்பட்டி, பூடலுார், சுக்காம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளன. இது பாராட்டுக்குரிய செயல்பாடாகும். எல்லோரும் மரங்கள் வளர்க்க வேண்டும்.

வேடசந்துார் மற்றும் நத்தம் பேரூராட்சிகளை, நகராட்சியாக மாற்றுவதற்கான கோரிக்கைகள் வந்துள்ளன. அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவையில் தொடங்கி வைத்தார்கள்.

விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.2.00 வரையிலான மருத்துவ செலவை அரசே ஏற்கும்.

விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு கல்வித்துறைக்கு ரூ.44,044 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். வேடசந்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வேடசந்துார், வடமதுரை, ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜிலியம்பாறை, நத்தம், சாணார்பட்டிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வரவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அவருக்கு வருகின்ற காலத்தில் பொதுமக்கள் என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், 15வது நிதிக்குழு மானியம் 2022-2023 நிதியிலிருந்து கொசவப்பட்டியில் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொதுசுகாதார மையம், அஞ்சுக்குழிப்பட்டியில் 41.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என மொத்தம் ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதிபெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் திருமதி சௌடீஸ்வரி கோவிந்தன், திருமதி ப.தனலட்சுமி பழனிச்சாமி, திரு.சு.சீனிவாசன், திருமதி எஸ்.பழனியம்மாள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்கள் திரு.ஜி.தேவசகாயம், திருமதி க.தனலட்சுமி கண்ணன், திருமதி மணிமேகலை, திரு.ராமராஜ், பேரூராட்சித் தலைவர்கள் திருமதி மேகலா கார்த்திகேயன், திருமதி நிருபாராணி, திரு.எம்.சேக் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் திரு.விஜயன், திரு.சிவக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர்கள் திரு.சாகுல்ஹமீது, திரு.மலைச்சாமி, திருமதி மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி ப.மல்லிகா, திரு.ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.சேகர், திரு.கந்தசாமி என்ற கண்ணன், வட்டாட்சியர்கள் திரு.சரவணன், திருமதி தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.இர.சரவணன், திருமதி சி.நளினி, மு.மதியழகன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.