Close

DIPR-P.R.NO.-1283-Hon’ble CM Press Release – HR & CE Dept – Muthamizh Murugan Conference

Publish Date : 28/08/2024

செய்தி வெளியீடு எண் : 1283

நாள் : 24.08.2024

செய்தி வெளியீடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.08.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பாக பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டினை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்கள், முருகப் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். அதனை தொடர்ந்து மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன.

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.

பழனியிலிருந்து இத்தொடக்க விழா நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி. செந்தில்குமார், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தருமபுரம் ஆதீனம் தவத்திரு தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் தவத்திரு ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் திரு. செந்தில் தொண்டைமான், லண்டன் துணை மேயர் திரு.பரம்நந்தா, மலேசிய முன்னாள் அமைச்சர் திரு.சுப்பிரமணியன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

வெளியீடு : உதவி இயக்குநர் /மக்கள் தொடர்பு, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை-34.