Close

Agri Grievance Day Petition

Publish Date : 28/07/2025
.

செ.வெ.எண்:88/2025

நாள்: 25.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.07.2025) நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில், கோட்டூர், நரியூத்து, பச்சைமலையான்கோட்டை, ஜம்புதுரைகோட்டை, பாளையங்கோட்டை ஆகிய கிராமங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்திட வேண்டும், வேடசந்துார் வட்டம், விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதியளிக்க வேண்டும், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 113 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 87 மனுக்கள் பெறப்பட்டதில் 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 14 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 30.60 மி.மீட்டர், ஜூலை மாதத்தில் பெய்த மழையளவு (16.07.2025 வரை) 7.62 மி.மீட்டர், ஜூலை-2025 மாதம் வரை பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 262.70 மி.மீட்டர், 2025-ஆம் ஆண்டு ஜூலை (16.07.2025) மாதம் வரை பெய்த மழையளவு 226.49 மி.மீட்டர், ஜூலை மாதம் (01.01.2025 முதல் 16.07.2025 வரை) இயல்பான மழையளவைக் காட்டிலும் 36.21 மி.மீட்டர் குறைவு ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 25.07.2025 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 26.70 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 72.90 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 64.41 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 49.72 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 19.49 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 26.97 அடி, மருதாநதி அணை(மொத்த உயரம் 74 அடி) நீர்மட்டம் 45.58 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 16.07.2025 வரை யூரியா உரம் விநியோகம் 1,640 மெ.டன், இருப்பு 3259.111 மெ.டன், டிஏபி விநியோகம் 360 மெ.டன், இருப்பு 1140.005 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 790 மெ.டன், இருப்பு 1428.000 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 392 மெ.டன், இருப்பு 1031.400 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 604 மெ.டன், இருப்பு 5513.000 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 107 மெ.டன், இருப்பு 90.100 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 208 மெ.டன், இருப்பு 160.400 மெ.டன் என மொத்தம் 4,101 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12,622.011 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

இன்றையக் கூட்டத்தில், தோட்டக்கலைத்துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 8,320 ஆடிப்பட்ட விதைத் தொகுப்புகள் மாவட்டம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தின் மூலம் வழங்கப்படவுள்ளது. கத்தரி, தக்காளி, மிளகாய், கீரை வகை, வெண்டை, கொத்தவரை ஆகிய 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்புகள் ரூ.30-க்கு வழங்கப்படுகிறது. இதை வாங்கி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இன்றையக் கூட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் விதை(தக்கைப்பூண்டு) 50 சதவீதம் மானியத்திலும், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தில் விவசாயிகள் வீட்டு காய்கறி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தட்டைப்பயறு, அவரை, துவரை விதைகள் அடங்கிய தொகுப்பு 200 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, செயற்பொறியாளர் (நங்காஞ்சியாறு) திரு.பாலமுருகன், வேளாண்மை துணை இயக்குநர் திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.