Book Festival-Awareness Marathon
செ.வெ.எண்:-86/2025
நாள்:-21.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி!” என்ற குறிக்கோளுடன் “விழிப்புணர்வு மாரத்தான்” நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் “வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி!” என்ற குறிக்கோளுடன் 23.08.2025 அன்று காலை 06.00 மணியளவில் திண்டுக்கல் நகரில் டட்லி பள்ளி மைதானத்திலிருந்து அங்குவிலாஸ் பள்ளி மைதானம் வரை “விழிப்புணர்வு மாரத்தான்” நடத்தப்படவுள்ளது. அதில், ஏழாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ / மாணவியர்கள் பள்ளிப் பிரிவிலும், கல்லூரி மாணாக்கர்கள், பொதுமக்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பொதுப் பிரிவிலும் பங்கேற்கலாம்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3000, நான்காம் பரிசு ரூ.2000 மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.1000 என மொத்தம் 4 பிரிவுகளில்
20 நபர்களுக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.
மேலும், இணைய வழியில் முன்பதிவு செய்து இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து நபர்களுக்கும் டி-ஷர்ட்டுகள், தொப்பிகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.