Monday Grievance Day Petition
செ.வெ.எண்:-01/2025
நாள்:-01.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.09.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 312 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 05 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.40,42,490 மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து 01 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காது கேட்கும் கருவி வழங்கினார். மேலும் நத்தம் வட்டாரம் வேலாயுதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பயனாளிக்கு திண்டுக்கல் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர் பயிற்சிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.