Private Candidate-Marksheet
செ.வெ.எண்:- 09/2025
நாள்: 06.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடைநிலைப் பொதுத் தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் இடைநிலை (SSLC) மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும் மார்ச் 2014, ஜீன் 2014, அக்டோபர் 2014, மார்ச் 2015, ஜீன் 2015, அக்டோபர் 2015, மார்ச் 2016, ஜீன் 2016, அக்டோபர் 2016, மார்ச் 2017, ஜீன் 2017, அக்டோபர் 2017, மார்ச் 2018, ஜீன் 2018, அக்டோபர் 2018 ஆகிய 15 பருவங்களுக்குரிய இடைநிலை (SSLC) மதிப்பெண் சான்றிதழ்களை மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன் இணைத்தனுப்பிய தேர்வரால் பெறப்படாமலிருக்கும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் / மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் இருப்பில் உள்ளன.
தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.
எனவே மேலே குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த செய்தி அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்குள் இவ்வலுவலகத்தை அலுவலகப் பணி நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் அணுகியோ அல்லது ரூ.45/- மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம், தேர்வரின் தேர்வுகூட நுழைவுச்சீட்டு (HALL TICKET) / தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL MARK SHEET) நகல் இணைத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை பெற இதுவே இறுதி வாய்ப்பாகும், தவறினால் மேற்படி தேர்வுப் பருவ மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி இயக்குநர் (அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்) திரு.மு.நாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.