COFFEE WITH COLLECTOR
செ.வெ.எண்:-31/2025
நாள்:-13.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
Coffee with Collector’ – கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவ/மாணவியருடன் உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 06.10.2025 வரை 15 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 300 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (13.10.2025) கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவ/மாணவியருடன் பதினாறாவது நிகழ்வாக ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல், பூம்பாறை மற்றும் மன்னவணூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 21 மாணவ/மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாணவ/மாணவியரிடம் தற்சமயம் அவரவர் பள்ளிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், கற்றல்-கற்பித்தலுக்கு உரிய கூடுதல் தேவைகள், போக்குவரத்து வசதிகள் குறித்தும், அவர்களின் இலட்சியம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் துறை பற்றியும் கேட்டறிந்தார். குறைந்தபட்சம் பட்டப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்தும், அதில் முழு ஈடுபாட்டுடன் நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி பெற முடியும் என ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளன, அவற்றை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மருத்துவம், பொறியியல் மட்டுமல்லாமல் பல்வேறு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும் மாணவ/மாணவியர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கங்கள் கேட்டு தெளிவு பெற்றனர். தமிழ்நாடு அரசு வழங்கும் 7.5% இடஒதுக்கீடு தொடர்பான வாய்ப்புகள், நிதியுதவிகள், JEE Mains, JEE Advanced, CLAT தேர்வுகளை எதிர்கொள்ளல் குறித்தும் மாணவ/மாணவியரிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். புத்தகங்களை மட்டும் படிப்பதோடு நின்றுவிடாமல் தினமும் செய்தித்தாள் வாசிப்பது, அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்வது, வாழ்வில் முன்னேறுவதற்குத் தேவையான அனைத்து நல்ல விக்ஷயங்களையும் தேடிப் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மிகுந்த தெளிவுடன் உயர்கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், சிறந்த கல்லூரிகளில் பயில்வதன் முக்கியத்துவம், உயர்கல்விக்குப் பிறகான இலக்கு, தொலைநோக்குப் பார்வை முக்கியம் எனவும் அறிவுரை வழங்கினார். நேர்காணலை எதிர்கொள்ளும் திறன் மற்றும் வழிமுறைகளையும் அறிந்து வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். பிற மாணவர்களைக் காட்டிலும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மாணவ/மாணவியருக்கு கல்வி மற்றும் கற்றல் சார்ந்த முன்னேற்றம் மிக முக்கியம் எனவும் தெரிவித்தார். பொதுத்தேர்வு வரையான அடுத்த ஆறு மாதங்கள் நன்கு திட்டமிட்டுப் படிக்க வேண்டும் என்றும் லட்சியம் உயர்வாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.