TAHDCO DEPT – TATOO MAKING, AESHETIC TRAINING COURSE AND SEMI PERMANENT MAKEUP COURSE
செ.வெ.எண்:-50/2025
நாள்:-22.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup Courses) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும் மற்றும் 18 முதல் 35 வயதிற்குள்ளும் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மேலும் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.