Close

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes

Publish Date : 15/11/2025
.

செ.வெ.எண்:-51/2025

நாள்:-13.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தலவாடம்பட்டி ஊராட்சி இராமபட்டிணம் புதூர் கிராமத்தில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டடம், விருப்பாட்சி ஊராட்சி விருப்பாட்சியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டடம், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம், சாமியார்புதூர் கிராமத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம், அரசப்பிள்ளைபட்டி ஊராட்சியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 பயணியர் நிழற்கூடம், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், லெக்கையன்கோட்டை ஊராட்சி, குழந்தைவேல்கவுண்டன்புதூர் கிராமத்தில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலை கடை கட்டடம், கொல்லப்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், ரூ.28.01 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கொல்லப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பாலம், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம், புலியூர்நத்தம் ஊராட்சி புலியூர்நத்தம் கிராமத்தில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டடம், பி.என்.கல்லுப்பட்டி கிராமத்தில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டடம், சின்னக்குழிப்பட்டி கிராமத்தில் புதிய நியாயவிலைக்கடை கட்டடம் ஆகிய ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், கொல்லப்பட்டி ஊராட்சியில் அரசு கள்ளர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 54 மாதங்களில் 3,133 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்கள்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் இப்பகுதியில் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு வராது. அந்த வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நமது ஊராட்சியில் 77 ஊராட்சிகளுக்கும், பழனியில் 16 ஊராட்சிகளுக்கும் மொத்தம் 93 ஊராட்சிகளுக்கு காவேரி ஆற்றிலிருந்து குடிநீர் வர இருக்கிறது.

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.

படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.