Agri-Kharif
செ.வெ.எண்:-38/2025
நாள்:-09.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் நெல்-I, மக்காச்சோளம்-I, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி-I பயிரில் பயிர் காப்பீடு பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் எற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
2025-ம் ஆண்டில் காரீப் பருவமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் விவசாயிகள் நெல்-I, மக்காச்சோளம்-I, சோளம், நிலக்கடலை மற்றும் பருத்தி-I பயிரில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்துகொள்ளலாம்.
இத்திட்டத்தை எஸ்பிஐ (SBI General Insurance Company Ltd.) காப்பீட்டு நிறுவனம் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் மொத்தமாக 111 குறு வட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்.
காரீப் பருவத்தின் கீழ் பதிவு செய்ய திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பயிர்களுக்கும் பயிர் சாகுபடி காலமானது ஜுன் மாதத்தில் தொடங்குவதனால் ஜுன் மாதம் முதலாக பயிர் வாரியான அடங்களுடன் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு மேற்கொள்ளலாம்.
நெல்-I பயிரானது 31.07.2025-ம் தேதியும், சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம்- I, பயிர்களுக்கு 16.09.2025-ம் தேதியும் மற்றும் பருத்தி- I பயிருக்கு 30.09.2025-ம் தேதியும் பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு நெல் –I பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.38,500, பிரீமிய தொகை ரூ.770, மக்காச்கோளம் – I பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.30,200 பிரீமிய தொகை ரூ.604, சோளம் பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.12,100, பிரீமிய தொகை ரூ.242, நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.29,200, பிரீமிய தொகை ரூ.584, பருத்தி – I பயிருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.11,281, பிரீமிய தொகை ரூ.564 செலுத்த வேண்டும்.
அறிவிக்கப்பட்ட இறுதிநாளுக்கு முன்பாக வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும் பட்சத்தில் பயிர் சேதம் அடைந்தால் பயிர் காப்பீடு செய்ய அன்றே இறுதி நாளாகும்.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.