Animal Husbandry-Lumpy skin disease
செ.வெ.எண்:-03/2025
நாள்:-02.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய அனைத்து பசுவினங்களுக்கும் வருகின்ற 03.09.2025 முதல் தோல் கழலை நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசி போடப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தோல் “கழலை” நோய் (LUMPY SKIN DISEASE) தடுப்பூசிப்பணி 2025
தோல் கழலை நோய் / லம்பி தோல் நோய் என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சார்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் பிற புற ஒட்டுண்ணிகள் மூலம் மற்ற ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவுகிறது.
நோய் அறிகுறிகள்:
கடுமையான காய்ச்சல் இருக்கும். கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள். உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து சீல் வெளியேரும். இந்த கட்டியின் அகலம் 0.5-5.0 செ.மீ வரை இருக்கும். நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படும். கால்கள் வீங்கி இருக்கும். மாடுகள் சோர்வாக காணப்படும்.
பரவும் முறைகள்:
1. கொசு. ஈ. உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாக இந்த நோய் பரவுகிறது.
2. கோடை கால தொடக்கத்தில் இந்த நோய் அதிக அளவில் பரவுகிறது.
3. பால் கறவையாளர்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது.
4. கன்று குட்டிகள், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும் போதும் நோய் தொற்று ஏற்படுகிறது.
5. இந்த நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் பரவுகிறது.
6. இந்த வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும்.
நோய் தொற்றின் பாதிப்புகள்:
1. இந்த நோய் தொற்று 60% வரை மாடுகளை பாதிக்கலாம்.
2. பால் உற்பத்தி குறையும்.
3. சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும்.
4. தீவனம் சரியாக உட்கொள்ளாததால் உடல் எடை குறைந்து காணப்படும்.
5. காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும்.
6. இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
7. சில மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
8. அதிக அளவில் நோய்தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவிகிதம் மிக குறைவு.
நோய் கடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறை
1.பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஆரோக்கியமான கால்நடைகளிடம் இருந்து தனிமைப் படுத்துதல் மற்றும் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தடுத்திட வேண்டும்.
2.கொசுக்கள், ஈக்கள், உண்ணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம்.
3. பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும்.
4.கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும்.
5. சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
தற்போது, நமது திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய அனைத்து பசுவினங்களுக்கும் வருகின்ற 03.09.2025 முதல் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர்களும், தங்களது நான்கு மாதத்திற்கு மேல் வயதுடைய பசுவினங்களுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடைகளை இந்நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.