Animal Husbandry (NADCP FMD 7dth Round)
செ.வெ.எண்:-116/2025
நாள்:-30.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசிப்பணித்திட்டத்தின் கீழ் 7வது சுற்று கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசிப் பணித்திட்டத்தின் கீழ் ஏழாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் பணியானது 02.07.2025 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மேலும் விடுபட்ட கால்நடைகளுக்கு இத்தடுப்பூசிப்பணி போடப்படும் பணியானது 24.07.2025 முதல் 31.07.2025 வரை 8 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது.
கால் மற்றும் வாய் நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம்.
மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், உமிழ்நீர் ஆகியவற்றால் காற்றின் மூலம் மற்றும் தொடர்பு ஏற்படுவதன் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
இந்நோய் வராமல் தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையால் அந்தந்த கிராம ஊராட்சிகளில் 02.07.2025 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படும். ஆகவே, விவசாயப் பெருமக்கள் தங்களது கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசியினை தவறாது போட்டுக் கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.