Close

Birth Registration – Time Extended

Publish Date : 09/10/2024

செ.வெ.எண்:-15/2024

நாள்:-07.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தை பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்று என்பது குடும்ப அட்டையில் பெயர் சேர்த்திட, குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற, வயது குறித்த ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றியமையாதது.

பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் 1969-ன் படி 01.01.2000-க்கு முன்பு வரையிலான ஆண்டுகளில் குழந்தையின் பெயரைக் குறிப்பிடப்படாமல் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்பு பதிவுகளில் 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட அரசால் ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர் மேலும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரையிலான கால அவகாசம் முடிவுற்ற நிலையில் குழந்தையின் பெயர் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தலைமை பதிவாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தை பெயரை பதிவு செய்வதற்கு அரசு அளித்துள்ள காலஅவகாச நீட்டிப்பு காலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.